‘கோச்சடையான்’ – கதை என்ன?

கோச்சடையானின் நட்சத்திர பட்டாளம் கிட்ட தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டது. எந்த நேரத்திலும் சௌந்தர்யா ரஜினிகாந்த் படத்தின் பங்குபெறும் கலைஞர்களின் இறுதிப் பட்டியலை அறிவிப்பார் என்று தெரிகிறது. இது தொடர்பாக பிரஸ் மீட் ஒன்று வைக்கும் திட்டமும் இருக்கிறது. இதுவரை அதிகாரப்பூர்வமாக சரத்குமார், தீபிகா படுகோனே, ஷோபனா, ருக்மிணி விஜயகுமார், நாசர், ஜாக்கி ஷராப், ஆதி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே இதுவரை வெளியிடப்பட்ட இரண்டு ஸ்டில்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்தில் ஏற்றி வைத்துள்ள சூழ்நிலையில், படத்தை எப்படியும் வெற்றிப்படமாக்கியே தீருவது என்கிற வெறியில் கடுமையாக உழைத்து வருகிறார் சௌந்தர்யா. அவ்வப்போது இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடமும் யோசனைகளை கேட்டு வருவதாக தெரிகிறது.
பாடல்களை பொறுத்தவரை ஏற்கனவே ‘சுல்தான்’ மற்றும் ‘ராணா’வுக்கு இசைப்புயல் இசையமைத்துக் கொடுத்த சில அருமையான பாடல்களை மிஸ் செய்ய சம்பந்தப்பட்ட எவருமே விரும்பவில்லை என்பதால், மேற்படி பாடல்களே (ட்யூன்கள்) கோச்சடையானுக்கும் பயன்படக்கூடும். வரிகள் மாற்றப்படலாம். தவிர கோச்சடையானுக்கு ஒரு சில பாடல்களை போட்டு தருவதாக இசைப்புயல் உறுதியளித்திருக்கிறாராம்.
படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சரத்குமார் உள்ளிட்ட பிரதான நட்சத்திரங்களுக்கு ஒரு சில வாரங்கள் மட்டுமே வேலை. அதுவும் ஸ்டுடியோவுக்குள் நடித்து காட்டவேண்டியது தான். மற்றபடி அனைத்தும் MOTION CAPTURE முறையில் அனிமேஷன் ஸ்டூடியோவில் வடிவமைக்கப்படும் என்பதால், படத்திற்காக அணுகியபோது எவரும் தயங்கவில்லை. தவிர, சூப்பர் ஸ்டாரின் படமாச்சே. கரும்பு தின்ன கசக்குமா என்ன?
படத்தில் நாட்டியம் முக்கியமான அம்சம் என்பதால் ஷோபனா, ருக்மிணி விஜயகுமார் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
“யாருக்கு எது உரியதோ அதை எவராலும் தட்டி பறித்துவிட முடியாது” என்ற கூற்றுக்கேற்ப, யார் யாரோ படத்தில் சூப்பர் ஸ்டாரின் ஜோடியாக நடிக்க பேசப்பட, இறுதியில் தீபிகா படுகோனே இந்த பொன்னான வாய்ப்பை தட்டி சென்றுவிட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கத்ரீன கை ஃப் கால்ஷீட் சிக்கலால் இந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். ‘ராணா’ எதிர்பாராதவிதமாக நிருத்திவைக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்திருந்த தீபிகாவுக்கு இது மிகப் பெரிய சந்தோஷத்தை அளித்திருக்கும் என்றால் மிகையாகாது. (அவற்றின் பரம ரசிகரான சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் தான்!).

படத்தின் கதை என்ன?

நாம் விசாரித்த வரையில் ‘கோச்சடையான்’ படத்தின் அவுட்லைன் இது தான்.
மக்களுக்கு நல்லாட்சி வழங்கி வரும் ‘கோச்சடையான்’ என்னும் மன்னன், எதிர்பாராத விதமாக நண்பர்களின் சூழ்ச்சி காரணமாக நாட்டை பறி கொடுக்கவேண்டியதாகிவிடுகிறது. பட்டத்து ராணியை பிரிந்து நிராயுதபாணியாக விடப்படும் ‘கோச்சடையான்’, எதிர்பாராமல் கிடைக்கும் நண்பன் (சரத்) ஒருவனின் உதவியோடு, பகைவர்களின் சூழ்சிகளை திட்டமிட்டு வென்று மீண்டும் நாட்டை கைப்பற்றுவதே ‘கோச்சடையான்’ கதையின் கரு. படத்தில் வில்லனாக அசத்தப்போவது நாசர். தவிர ஜாக்கி ஷராப்புக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் உண்டு. இந்த கருவிற்கு விறுவிறுப்பான திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. காட்சியமைப்புக்கள் படத்தை வித்தியாசப்புடித்தி காண்பிக்கும். படம் ஹிஸ்டாரிகல் சப்ஜெக்ட் என்றாலும், படத்தில் பாத்திரங்கள் அணியும் காஸ்ட்யூம்கள் முதல் பயன்படுத்தும் ஆயுதங்கள் வரை அனைத்தும் புதுமையாக இருக்கும். படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை மிகவும் வித்தியாசமாக அமைக்க பீட்டர் ஹெயின்ஸ் திட்டமிட்டு வருகிறார். சரித்திர கதைகளுக்கே உரித்தான பிரத்யேக சண்டைக்காட்சிகள் படத்தில் உண்டு.
படத்தில் சூப்பர் ஸ்டார் ஒரு பரம சிவ பக்தராக வருகிறார். ருத்திராட்சமும், பாசிமனியும் படத்தில் இவரது அடையாளங்கள் என்பது இதுவரை வெளியிடப்பட்ட இரண்டு ஸ்டில்களை பார்த்தாலே புரிந்திருக்கும்.
சௌந்தர்யா ரஜினி மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் திறமை மீது ரசிகர்களுக்கு அபார நம்பிக்கை இருந்தாலும், இந்த ‘ஒரு புதிய தொழில்நுட்ப’ படத்தை எப்படி ஒரு சில மாதங்களில் முடிக்கப்போகிறார்கள் என்பதே அனைவர் மனதிலும் இருக்கும் கேள்வி.
மற்றபடி ‘கோச்சடையான்’ இறைவன் அருளால் வெற்றிக்கொடி நாட்டியே தீருவான் என்று நம்புவோமாக!
copy :http://onlysuperstar.com

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...