ரஜினியைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக உள்ளது! - சிரஞ்சீவி


சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பார்த்தால் எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது. நானும் அரசியலை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு நடிக்க வந்துவிடலாம் போல உள்ளது, என்றார் தெலுங்கு நடிகரும் பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவருமான சிரஞ்சீவி.

ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடிக்கும் எந்திரன் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் வெளியாகிறது.

சில தினங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகும் ‘ரோபோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாதில் நடந்தது. இதில் ரஜினியின் நெருங்கிய நண்பர்களான மோகன் பாபு மற்றும் சிரஞ்சிவி பங்கேற்றனர். ‘ரோபோ இசையை சிரஞ்சிவி வெளியிட்டார்.

இதில் பேசிய சிரஞ்சிவி எடுத்த எடுப்பிலேயே, "எனக்கு பொறாமையாக உள்ளது", என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "நான், ரஜினி, மோகன் பாபு மூவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். மூவருக்குமே அரசியலில் வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஒவ்வொருவராக அடியெடுத்து வைப்போம் என்ற மனநிலையில் இருந்தோம். மோகன்பாபு முதலில் அரசியலுக்கு வந்தார். நான் 'பிரஜா ராஜ்ஜியம்' கட்சி துவங்கினேன். அரசியல் வாழ்க்கைக்கு வந்ததும் சினிமாவில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்தேன்.

ஆனால் ரஜினி இவ்வளவு இளமையாக திரையில் ஐஸ்வர்யாராயுடன் டூயட் பாடுவதைப் பார்க்கும்போது எனக்கு பொறாமையாக உள்ளது. 'ரோபோ' என்ற இந்தியாவின் பிரமாண்டமான படத்தில் ரஜினி கலக்கிக்கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லையே என ஏக்கமாய் உள்ளது. இதையெல்லாம் நான் மிஸ் பண்ணிட்டேன். இதைப் பார்த்ததும் மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்துவிட்டது எனக்கு...

ஆனால் பொறாமை என்பது ஒரு கலைஞனாக நான் சொன்னது. ஆனால் அண்ணன் ரஜினி எதைச் செய்தாலும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தும் சகோதரன் நான். அவரைப் போன்ற அற்புதமான கலைஞரையும், அருமையான மனிதரையும் பார்க்க முடியாது. இந்தப் படம் சரித்திரம் படைக்கும்", என்றார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...