அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூடி அவசர ஆலோசனை; ரஜினியை சந்திக்க முடிவு!!

தமிழகம் முழுதும் உள்ள ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சென்னையில் வரும் 27ஆம் தேதி கூடி அவசர ஆலோசனை நடத்த உள்ளனர். முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி ரஜினிக்கும் தலைமை மன்றத்துக்கும் கோரிக்கைகள் வைக்க உள்ளனர்.
நடிகர்களில் ரஜினிக்கு தான் ரசிகர் மன்றங்கள் அதிகம் உள்ளன. பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யபடாத மன்றங்கள் என சுமார் ஒரு லட்சத்துக்கும் மேல் மன்றங்கள் உள்ளன. இதில் அங்கீகரிக்கப்பட்டமன்றங்களின் எண்ணிக்கை மட்டும் சுமார அறுபதாயிரத்தை தாண்டும். தமிழகம் தவிர மஹாராஷ்டிரம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், புது டில்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ஜப்பான், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பல அயல்நாடுகளிலும் ரஜினிக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன.
தற்போது அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் சென்னையில் ஒன்று கூடி குசேலன் பட விவகாரத்தில் ரஜினிக்கு எதிராக செய்யப்படும் பிரச்சாரம் மற்றும் அவருக்கு எதிராக பத்திரிக்கைகளில் செய்யப்படும் அவதூறுகளுக்கு தக்க பதிலடி கொடுப்பது குறித்தும் ஆலோசனை செய்யவுள்ளனர்.
மேலும் மாறிவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மன்றங்களை புனரமைத்தல் மற்றும் புதுப்பித்தல், நிறுத்தப்பட்ட பதிவு எண்களை உடனடியாக வழங்குதல், புதிதாக மன்றம் வைக்க விரும்புபவர்களுக்கு அனுமதியளித்தல், காலியாக உள்ள இடங்களுக்கு உடனடியாக நிர்வாகிகளை நியமித்தல், மன்ற பிரமுகர்கள் ரஜினி சந்திக்க பிரதி மாதம் தேதி ஒதுக்குதல், ரசிகர் மன்ற கொடியினை அங்கீகரித்தல், மாணவரணி, வழகறிஞர் அணி, விவசாயிகள் அணி என மன்றங்களில் பல்வேறு கிளைகளை அதிகாரபூர்வமாக துவக்க அனுமதி கோருதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றி ரஜினியிடமும் தலைமை மன்றத்திடமும் அளிக்க முடிவு செய்துள்ளனர். இதை ஏற்க மறுக்கும் பட்சத்தில் உண்ணாவிரதம் உள்ளிட்ட அறப்போராட்டங்களில் ஈடுபட அனைத்து மாவட்ட நிர்வாகிகளும், அதன் உறுப்பினர்களும் ஒரு மனதாக தீர்மானித்துள்ளனர்.
இது குறித்து, சென்னையில் உள்ள மன்ற நிர்வாகி ஒருவர் கூறியதாவது, “தனது பலம் என்னவென்று தலைவருக்கு தெரியவில்லை. மன்ற சீரமைப்பு மற்றும் பதிவு எண் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றினால் அது அவருக்கு புரியும். மேலும் போவோர் வருவோர் எல்லாம் ரஜினியை விமர்சனம் என்ற பெயரில் புழுதி வாரி தூற்றுவதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே அமைப்பு ரீதியிலான பலம் தற்போது மிகவும் அவசியமாகிறது. ரசிகர் பலமே இல்லாத நடிகர்கள் கூட கட்சி ஆரம்பித்து உலா வரும் நிலையில், தனது பின்னால் லட்சோப லட்சம் ரசிகர்படை மற்றும் மக்கள் சக்தி உள்ள ரஜினி இப்படி அமைதியாய் இருப்பது ஏன் என்று புரியவில்லை. இருப்பினும் வருங்காலத்தில் அவர் நல்லதொரு முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்,” இவ்வாறு அந்த மன்ற பிரமுகர் கூறினார்.
தற்போது மாறிவரும் தமிழக சூழ்நிலையில் ரஜினி ரசிகர்கள் தாங்கள் தனித்துவிடப்பட்டது போன்று உணர்கின்றனர். ஏற்கனவே தமிழ் நாட்டில் விஜயகாந்த், சரத்குமார் போன்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ள நிலையில், தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியும் கட்சி ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் குறித்தும் மன்ற சீரமைப்பு குறித்தும் தெளிவான ஒரு முடிவை அறிவிக்கும்படி சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து மேற்படி ரசிகர்கள் வற்புறுத்துவார்கள் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...