அக்டோபர் சந்திப்பு - ரசிகர்கள் “எதிர்பார்ப்பு” என்ன?


அக்டோபர் சந்திப்பு உண்மையென்றாலும், அரசியலுக்கு வருவார், கொடி ரெடி, இயக்கம் பெயர் ரெடி, டி.வி.கூட ரெடி என்று பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை எல்லாம் ரசிகர்கள் முழுதுமாக நம்பவில்லை.

இறுதி வாய்ப்பு
அதே சமயம் இது தங்களுக்கு இறுதி வாய்ப்பு என்று அவர்கள் உணர்ந்தேயிருக்கின்றனர். தலைவரை சந்தித்து மனம்விட்டு பேச இனி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது சந்தேகமே என்பதால், இந்த சந்திப்பிலேயே அவரிடமிருந்து பாஸிடிவ்வான ஒரு பதிலை பெற்றே தீருவது என்று முடிவோடு இருக்கின்றனர்.
இந்த சந்திப்பில் தான் அரசியலுக்கு வருவது குறித்து அவர் இறுதியாக கூறிவிடுவார் என்றோ, கட்சி ஆரம்பித்துவிடுவார் என்றோ ரசிகர்கள் நினைக்கவில்லை. (நானும் நினைக்கவில்லை!)
கடந்த கால ஏமாற்றங்களை இன்னும் மறக்கவில்லை
வணிக காரணங்களை முன்னிட்டு சில பத்திரிக்கைகள் தான் அவ்வாறு கூறிவருகின்றன. ரசிகர்கள் அவற்றை அப்படியே நம்பிவிடவில்லை. கடந்தகால ஏமாற்றங்களை அவர்கள் இன்னும் மறக்கவில்லை. குறைந்தபட்சம் ஒரு சேவை அமைப்போ அல்லது அதற்க்கான கொடியோ அறிவித்தால் கூட போதும் - மற்றதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றே ரசிகர்கள் நினைப்பதாக தெரிகிறது.
இந்த பேனர், போஸ்டர் சமாச்சாரங்கள் எல்லாம், ரசிகர்கள் “சந்திப்பு” குறித்து எதுவும் தெரியாமல் மிதமிஞ்சிய எதிர்ப்பார்ப்பில் செய்வதாக நினைக்கவேண்டாம். ஏதாவது ஒரு முடிவை அவர் அறிவித்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தை அவருக்கு ஏற்படுத்துவதே அவர்கள் நோக்கமாகும். (இது போன்ற நிர்பந்தங்கள் தான் தலைவருக்கு சரி. அவராக எந்த காலத்தில் “நான் அரசியலுக்கு வருகிறேன், பொது நல இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கிறேன்” என்று கூறப்போகிறார்? நடக்கிற விஷயமா அது?) தானாக பழுக்க மறுப்பதை, மக்களின் நன்மைக்காக தட்டி பழுக்க வைக்க ரசிகர்கள் நினைப்பதில் தவறு இல்லையே?
இன்னும் கூட தயார்; ஆனா தலைவர் எதுக்கும் ஒரு வார்த்தை சொல்லட்டும்
இந்த பேனர்கள் தவிர ‘சந்திப்பு’ அன்று ராகவேந்தரா மண்டபம் அமைந்துள்ள கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், கோடம்பாக்கம் மேம்பாலத்தில் அடிக்கொரு ‘ஸ்டாண்டீஸ்’ (சிறிய பேனர்கள்) வைக்க திட்டமிட்டுள்ளனர். இன்னும் ஒரு படி மேல போய் அன்றே அன்னதானம், ரத்த தானம், உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யத்தயார். இருந்தாலும் தலைவர் என்ன சொல்கிறார் என்று பார்த்துவிட்டு அவற்றை செய்யலாம் என்று தங்கள் வேகத்திற்கு அணை போட்டுள்ளனர்.

நான்கு பேர் செய்யாததை இந்த பேனர் செய்யட்டுமே
இதுவும் ஒரு சராசரி சந்திப்பாக முடிந்துவிட்டால் என்ன செய்வது? எனவே இந்த சந்திப்பு குறித்து தாங்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் இருப்பதாக தலைவருக்கு உணர்த்தவே இந்த பேனர், போஸ்டர் சமாச்சாரங்கள் எல்லாம். ஒரு வேலை பத்திரிகைகளும் அவரது நெருங்கிய நண்பர்களும், வலைத்தளங்களும் ரசிகர்களின் இந்த எதிர்ப்பார்ப்பு குறித்து அவருக்கு சரியான தகவல்களை கொண்டு சேர்க்க தவறும் பட்சத்தில், இந்த பேனர்கள் அவரிடம் கொண்டு சேர்க்கும் - என்று ரசிகர்கள் கருதுகிறார்கள். உண்மை தானே? எனவே என்னால் இயன்றவரை பத்திரிக்கைகளுக்கு இந்த பேனர் குறித்த செய்திகளை கொண்டு சேர்க்க முயற்சி செய்து வருகிறேன்.
சந்திப்பு புஸ்வானமானால் ‘எந்திரன்’ வேண்டாமே…
இந்த சந்திப்பில் தலைவர் தனது அடுத்த மூவ் குறித்து எதுவும் தெரிவிக்காமல், வழக்கம் போல சராசரி சந்திப்பாக முடிந்துவிட்டால் எந்திரனில் அவர் நடிக்காமல் இருப்பது நலம் - என்று பல ரசிகர்கள் கூறுகிறார்கள். ஆகையால் அட்லீஸ்ட் எந்திரனின் எதிர்காலதிற்க்காகவாவது தலைவர் ஏதாவது செய்யவேண்டும் என்று சில தீவிர ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். அதே சமயம் சந்திப்பு பாசிடிவ்வாக முடிந்தால் (அரசியல் குறித்தோ அல்லது இயக்கம் குறித்தோ ஜஸ்ட் ஒரு கோடு போட்டு காண்பித்தால் கூட போதும்) தமிழகம் முழுதும் வரும் தலைவரின் பிறந்த நாள் களை கட்டிவிடும்.
நீங்களும் நானும் நினைப்பது முக்கியமல்ல
சந்திப்பு குறித்தோ, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தோ, அவரது “எந்திரன்” - குறித்தோ நீங்களோ நானோ நினைப்பதைவிட இவர்கள் (தீவிர ரசிகர்கள்) நினைப்பதுதான் முக்கியம். ஏனெனில் ரஜினி இதுவரை கட்டியுள்ள கோட்டையின் கற்கள் இவர்கள் தான். இவர்களை, இவர்களது எதிர்ப்பார்ப்புக்களை புறகணித்துவிட்டு எதையும் சாதிக்க முடியாது. நம்மில் பலர் காகிதப்புலிகள் என்று நமக்கே தெரியும். (நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தால், உங்களில் எத்தனை பேர் ஓட்டு போட தாய் நாடு வருவீர்கள்? அல்லது இங்கிருப்பவர்கள் எத்தனை பேர் களப்பணி செய்ய வருவீர்கள்?)
ரஜினியின் படத்தை ஒன்றிரெண்டு முறை பார்த்தவிட்டு இது போன்று பேசவே நமக்கு தெரியும். ஆனால் இந்த ரசிகர்கள் அப்படியல்ல. ரஜினி நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே தியேட்டரில் அலங்கார வளைவு வைப்பது, ஸ்டார் கட்டுவது, கொடி கட்டுவது, ரஜினியின் திரைப்படத்தை ஒன்றிற்கு பலமுறை பார்ப்பது என்று களத்தில் இறங்கி பணியாற்றுபவர்கள் இவர்கள். இவர்களில் சிலருக்கு காலப்போக்கில் அரசியல் மற்றும் பதவி ஆசை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பெரும்பாலனவர்கள் நினைப்பு ஒன்றே ஒன்று தான். “தலைவா, நீ ஆள வேண்டும். மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்!” என்பது தன் அது. இவர்களை நீங்கள் பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை. இவர்களது பணியை, அற்பணிப்பை கொச்சைபடுத்தவேண்டாம்.

என் நிலை என்ன?
என்னை பொறுத்தவரை நான் நினைப்பது ஒன்றே ஒன்றுதான்- தலைவரே பல்வேறு காலகட்டத்தில் சொன்னது தான் - அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றில்லை. இன்று அரசியல் இருக்கும் ஒரு மோசமான சூழ்நிலையில் - அரசியல் பிரவேசம் இல்லாமல் - இந்த தமிழ் மக்களுக்கு வேறு ஏதாவது ஒரு பொது அமைப்பு மூலம் தொண்டுகள் செய்தால் கூட போதும். நாம் மட்டுமல்ல பெரும்பாலான ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்கள். அதே சமயம் அரசியல் சவாலை அவரே விரும்பி ஏற்றுகொண்டால், என்னைப்போல மகிழ்ச்சி அடைபவர் வேறு யாரும் இருக்க முடியாது.
அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ - என்னை பொறுத்தவரை தலைவர் பெயரோடும் புகழோடும் என்றும் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும். சரிதானே?

உங்கள் கவனத்திற்கு
ரசிகர்களின் ஏற்பாடுகள் குறித்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பப்பட்ட செய்தி: (எல்லோரையும்விட முன்கூட்டியே உங்கள் பார்வைக்கு!!)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...