லயோலா சர்வே: என்ன கொடுமை சார் இது?


கடந்த பல ஆண்டுகளாக நான் லயோலா சர்வேயை கவனித்து வருகிறேன். நம்மை பற்றி பாசிடிவ்வாக போட்டிருந்தால் அதை “ஓ.. அப்படியா!!” என்ற எடுத்துக் கொண்டு போய்கொண்டே யிருக்கவேண்டும். தவறாக போட்டிருந்தால் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை, புறக்கணிப்பதே சிறந்தது.

அதென்ன நேர்மறையாக போட்டிருந்தால் எடுத்துக் கொள்ளவேண்டும். எதிர்மறையாக போட்டிருந்தால் புறக்கணிக்க வேண்டுமா? என்று நீங்கள் கேட்கலாம்.
ஊரே அறிந்த நாணயமான ஒரு நல்ல நபரை பற்றி சர்வே எடுத்தால், அவரைப் பற்றி நல்லவிதமாக ரிசல்ட் வருவது இயல்பு. அதே, அவரை பற்றி வேறு விதமாக ரிசல்ட் வந்தால்? கோளாறு சர்வே எடுக்கப்பட்ட நபரிடம் இல்லை. எடுத்த நபரிடம் என்று தானே அர்த்தம்? அதுபோலத்தான் இதுவும்.
ஓகே. ரஜினி குறித்து சர்வே முடிவுகள் கூறியிருப்பது என்ன?
ரஜினியின் அரசியல் குறித்து கருத்து தெரிவித்தவர்களில் வெறும் 4% மட்டுமே அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.
கடந்த பத்தாண்டுகளாக மக்களிடம் தொடர்ந்து கேட்கப்பட்டு வரும் கேள்வி இது. “அவர் கண்டிப்பாக வரவேண்டும்; வந்தால் நன்றாக இருக்கும்” என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக பதில் சொல்லி சொல்லி புளித்து போன மக்களின் மனநிலை இப்போது எப்படி இருக்கும்?
“வரட்டும்யா. அப்புறம் பார்க்கலாம்!!” என்பதாகத்தானே இருக்கும்.
இது யதார்த்தம் தானே?
“அரசியலில் ரஜினி - அதற்கான மக்கள் ஆதரவு” என்பது பத்து வருடங்களுக்கு முன்பு 40% என்று இருந்தது, காலங்கள் ஓட ஓட படிப்படியாக குறைந்து கடைசியில் 4% என்று வந்து நிற்கிறது. இந்த முறை சரிவு சற்று அதிகம். “வருத்தம்” சர்ச்சை அவரது செல்வாக்கை வெகுவாக பாதித்திருக்கிறது என்பதே உண்மை.
மேலும் அரசியலுக்கே வராத, அது குறித்து மௌனம் காக்கும் ஒரு நபரை பற்றி மக்களிடம் அரசியல் கேள்வி கேட்டதே மிகப்பெரிய தவறு. பல ஆண்டுகளாக ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த எதிர்ப்பார்ப்பில் இருந்து, ஏமாந்த மக்களிடம் எப்படி சாதகமான பதில் வரும்? (இடைப்பட்ட காலத்தில் மக்களின் எதிர்ப்பார்ப்பை பயன்படுத்தி வேறொரு நடிகர் களத்தில் புகுந்த கொடுமையை என்னவென்று சொல்ல?)
ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று திட்டவட்டமாக சொன்ன பின்னோ அல்லது வந்ததற்கு பின்னரோ இந்த சர்வேயை எடுப்பதே பொருத்தமானது.
இதனிடையே, இந்த சர்வேயில் ரஜினி பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பது குறித்து பெரும்பாலான பத்திரிக்கைகள் நாம் எதிர்ப்பார்த்ததை போல பெரிதாக ப்ரொஜெக்ட் செய்யவில்லை. விஜயகாந்தின் அதி தீவிர விசுவாசிகளான தினமலரும், மாலைச்சுடரும் தான் ரஜினி பின்னுக்கு தள்ளப்பட்டார் என்று ஹைலைட் செய்தன. ஸோ, பெரிதாக இது குறித்து நாம் கவலைப்படவேண்டியதில்லை.


சரி, இரண்டாவதாக தமிழக மக்களுக்கு பிடித்த நடிகர்கள் பட்டியலில் எம்.ஜி.யார், சிவாஜி, விஜய் ஆகியோருக்கு பிறகு ரஜினி இடம் பெற்றிருக்கிறார். இங்கு தான் இருக்கு விஷயமே.
எந்த ஒரு நடிகருக்கும் செல்வாக்கு என்பது ஒரு ஹிட் படம் கொடுத்தால் ஏறுமுகமாக இருக்கும். தோல்விப்படம் கொடுத்தால் இறங்குமுகமாக இருக்கும். இது தானே உண்மை? ஒப்புக்கொள்ளகூடியது?
எனவே “குசேலன்” சர்ச்சை மற்றும் அதன் திணிக்கப்பட்ட தோல்வியால் ரஜினி நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டார் என்று வைத்துகொள்வோம், தொடர்ந்து இரு தோல்விப்படங்கள் கொடுத்த விஜய் எப்படி மூன்றாம் இடத்திற்கு வந்தார்? (அவர் அங்கு படித்தார் என்பாதாலா அல்லது வேறொரு காரணத்தினாலா?)
பில்லா என்ற வெற்றிப்படம் கொடுத்த அஜீத் எங்கே? (விஜயை விட இவருக்கு ரசிகர்கள் அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மை)
தசாவதாரம் கண்ட சிறந்த நடிகரான கமல் எங்கே? இவர்களெல்லாம் தமிழ் நாட்டில் இல்லையா? அல்லது இருக்க கூடாதா? (திருடனுக்கு தேள் கொட்டியது போல் கமல் ரசிகர்கள் திருதிருவென விழிப்பதாக தகவல்.) நமக்காவது குசேலனால் சரிவு என்று ஆறுதல் பட்டுக்கொள்ளலாம். சிவாஜி ரிலீஸ் சமயத்தில், எடுக்கப்பட்ட போன சர்வேயின் படி ரஜினியின் புகழ் கூடியிருந்தது. (இணைக்கப்பட்டுள்ள சென்ற சர்வே குறித்த அப்போது நான் எடுத்த மாலைச்சுடர் போஸ்டர் படத்தை காண்க. போஸ்டரில் தேதியை உற்று பார்க்கவும்.) ஆனால் கமல் ரசிகர்கள் கூற்றுப்படி தசாவதாரம் மாபெரும் வெற்றிப்படம் ஆயிற்றே. அந்த படத்தின் பெரும் வெற்றி கமலின் புகழை அட்லீஸ்ட் மூன்றாம் இடத்திற்கு கொண்டுவருமளவுக்கு கூடவா இல்லை? என்ன கொடுமை சார் இது?
ஸோ, இந்த முறை சர்வே முடிவுகள் திரிக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. யாரை திருப்திபடுத்தவோ?
ரஜினியின் அரசியல் குறித்து அவரது ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்புக்கள் நிலவும் சமயத்தில் இந்த சர்வே அவசர அவசரமாக எடுக்கப்பட்டு, எதிர் மறை முடிவுகள் மக்கள் மீது திணிக்கப்படுவது தெளிவாக புரிகிறது. ஸோ, இந்த முறை கை மாறியது எத்தனை கோடிகளோ? அல்லது வாக்குறுதிகளோ ?
(ஒவ்வொரு முறையும் அரசியல் கட்சிகளிடம் மட்டுமே நடக்கும் பேரம் இம்முறை சில நடிகர்களிடமும் நடந்திருக்கும் என்று அவர்களை நன்கு அறிந்த நண்பர் ஒருவர் என்னிடம் கூறியது தனிக்கதை.)
மேலும் அறிவியல் பூர்வமான முறைகளை அவர்கள் சர்வே எடுக்க கடைப்பிடிப்பதில்லை. ஆறு கோடி மக்கள் வசிக்கும் ஒரு மாநிலத்து மக்களின் மன நிலையை சும்மா 2000 மக்களை வைத்து தீர்மானித்தால் எப்படி இருக்கும்?
தலைவர், இந்த சர்வே முடிவுகளை பல வகைகளில் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்பதே என் போன்றவர்கள் விருப்பம். இல்லையெனில் இன்று ரஜினியை விஜய்க்கு கீழ் கொண்டு சென்றவர்கள் நாளை வையாபுரிக்கும் கீழ் கொண்டுசெல்லவும் தயங்கமாட்டார்கள்.
தலைவா, விழித்துகொள். புத்திசாலிகளுக்கு ஒரு முள் குத்திய அனுபவம் காடளவு எச்சரிக்கைக்கு சமமல்லவா?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...