பிரபுதேவாவின் மகன் திடீர் மரணம்; ரஜினி நேரில் சென்று அஞ்சலி


இயக்குனர் பிரபு தேவாவின் மகன் விஷால் புற்று நோய் காரணமாக திடீரென்று மரணமடைந்தான். திரையுலக முக்கியஸ்தர்கள், நடிகர், நடிகையர் பலர் நேற்று பிரபு தேவாவின் வீடிற்கு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபு தேவா ரம்லத் என்கின்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு விஷால், ரிஷி தேவா, மற்றும் ஆதித் தேவா என மூன்று மகன்கள் உண்டு.
மூத்தவன் விஷாலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கான்சர் கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சையை அளித்துவந்தார் பிரபு தேவா. அவன் மீது மிகவும் பாசம் வைத்திருந்தார். அண்மையில் சுவிட்சர்லாந்தில் நடந்த வில்லு படத்தின் படப்பிடிப்பிற்கு மகனையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தார் பிரபு தேவா. திரும்பி வந்ததும் மகன் சுகவீனமடைந்தான். இதையடுத்து அவனுக்கு தீவிர சிகிச்சையளித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3.30 க்கு விஷால் மரணமடைந்தான்.
ரஜினி, கமல் அஞ்சலி
மகனது உடலைப் பார்த்து பிரபு தேவாவும் அவரது மனைவியும் கதறி அழுதனர். ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்தவர்கள் முக்கியப் பிரமுகர்கள், நடிகர் நடிகையர் பிரபு தேவாவின் வீடிற்கு சென்று அவரது மகனுக்கு அஞ்சலி செலுத்தினர். ரஜினி தனது குடும்பத்துடன் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பிரபு தேவாவின் வீட்டிற்க்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மற்றும் மனைவி லதா ஆகியோரும் உடனிருந்து சிறுவன் விஷாலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சிறுவன் விஷால் உடல் நேற்று மாலை 3.00 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
சூப்பர் ஸ்டாரின் தீவிர விசிறி
சிறுவன் விஷால், சூப்பர் ஸ்டாரின் தீவிர விசிறி என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு நடைபெற்ற பிரபு தேவாவின் சகோதரர் நாகேந்திர பிரசாத்தின் திருமண நிகழ்ச்சிக்கு ரஜினி வந்த போது, ஓடி வந்து பிரியமுடன் அவருடன் புகைப் படமெடுத்து கொண்டான். சிறுவனின் மரணம் ரஜினியை மிகவும் பாதித்தது. ஆகையால் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, பிரபு தேவாவிற்கு ஆறுதல் கூறினார் ரஜினி.
தங்கள் மகனை இழந்து வாடும் பிரபுதேவாவின் குடும்பத்தாருக்கு நம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். விஷாலின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...