பாட்ஷா-2: பரபரப்பில் சத்யா மூவீஸ்!


தமிழ் சினிமாவில் மிக முக்கிய இடம் ரஜினி நடித்த பாட்ஷா படத்துக்கு உண்டு. அந்தப் படம் படைத்த வசூல் சாதனைகள் அத்தனை உண்டு. அரசியலிலும் அந்தப் படத்துக்கு மிக முக்கிய இடம் உண்டு.இப்போது, அந்தப் படத்தின் இரண்டாம் பகுதியை தயாரிப்பதில் மும்முரம் காட்ட ஆரம்பித்துள்ளனர். இதற்குக் காரணமும் ரஜினியேதான்.சமீபத்தில் ஆர்.எம்.வீ. இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட ரஜினி, "என்னால் பலன் அடைந்தவர் பலர்; நஷ்டமடைந்த சிலரில் ஆர்.எம்.வீ-யும் ஒருவர். 'பாட்ஷா' போன்ற படத்தை ஆர்எம்வீயால் மட்டுமே மீண்டும் தயாரிக்க முடியும்..."என்று தானாகவே கால்ஷீட்டுடன் நிற்க, பொன்னான சந்தர்ப்பத்தை கப்பென்று பிடித்துக் கொண்டார் ஆர்எம்வீ.விளைவு, 'எந்திரன்' படத்துக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படத்தை ஆர்.எம்.வீயின் சத்யா மூவீஸ் தயாரிக்க ஏற்பாடு நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து சத்யஜோதி பிலிம்ஸ் தியாராகஜனுடன் (ஆர்எம்வீ மருமகன் இவர்) தொடர்பு கொண்டு விசாரித்தோம்."இன்னும் இது பற்றி எதுவும் அதிகாரப்பூர்வமாக முடிவாகவே இல்லையே... அப்படி ஒரு திட்டமிருந்தால் நிச்சயம் தெரிவிப்பார்கள்" என்றார்.ஆனால் 'பாட்ஷா - 2' என்ற தலைப்பில் தீவிர கதை ஆலோசனை நடக்கிறதாம், சத்யா மூவீஸ் கதை இலாகாவில்! அதே நேரம் இது பாட்ஷாவின் இரண்டாம் பாகம் என்று வெளியிடாமல், புதிய பெயரில் புதிய கதையுடன் உருவாக்கலாம் என்றும் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளனவாம். எனவே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம். பார்ப்போம்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...