கமல் நடிக்க வேண்டிய எந்திரனில் நான் நடிக்க தயங்கினேன் - ரஜினி பரபரப்பு பேச்சு



நடிகர் கமலஹாசன் சினிமா துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி விஜய் டி.வி. அவருக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்தியது. இந்த விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

இதில் ரஜினிகாந்த், மலையாள நடிகர் மம்முட்டி, தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், அல்லு அர்ஜுன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், மற்றும் தமிழ் நடிகர்- நடிகைகள் பலர் வாழ்த்தி பேசினர்.
கமலின் 50 வருட சினிமா சாதனை பற்றி ரஜினிகாந்த் பேசியதாவது:-
கமலைப்பற்றி பேச வேண்டுமானால் 2 நாள் வேண்டும். 1975-களில் அவர் சூப்பர் ஸ்டாராக இருந்த காலங்களில்தான் நான் தமிழ் சினிமாவிற்குள் வந்தேன். நாங்கள் இணைந்தும் படங்களில் நடித்து கொண்டிருந்த காலம் அது. “இளமை ஊஞ்சலாடுகிறது” படத்தில் என்னை நடிக்க சிபாரிசு செய்தவரே கமல்தான். அவர் நினைத்திருந்தால் என்னை நடிக்கவிடாமல் செய்திருக்க முடியும்.
நினைத்தாலே இனிக்கும் படம்தான் நாங்கள் இணைந்து நடித்த கடைசி படம். அப்போது கமல் என்னிடம் சொன்னார். ரஜினி நாம் இனிமேல் இணைந்து நடிக்க வேண்டாம். அப்படி நடித்தால் புகழ் பெயர் வாங்க முடியாது. நீங்கள் உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
தமிழ் சினிமா உலகில் ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறி என்னை உற்சாக மூட்டினார். இது மட்டுமல்ல நாம் பிரிந்தாலும் என் படங்களில் உள்ள கலைஞர்களை நீங்கள் பயன்படுத்துங்கள். உங்கள் படங்களில் உள்ளவர்களை நான் பயன்படுத்துகிறேன் என்று கூறினார்.
சிரஞ்சீவி, அமிதாப், மம்முட்டி, மோகன்லால் எல்லோரும் நினைக்கலாம் கமல் என்ற சூப்பர் ஸ்டார் இருக்கும்போது ரஜினி எப்படி இவ்வளவு பெரிய ஹீரோவானான். நான் கமல் நடிப்பை பார்த்துதான் இந்த அளவுக்கு முன்னேறி உள்ளேன்.
குருநாதர் பாலச்சந்தர் எங்கள் 2 பேரையும் வைத்து இயக்கினார். அப்போது சூட்டிங்கில் கமல் நடித்து கொண்டிருப்பார். நான் அவர் நடிப்பை பார்க்காமல் சிகரெட் பிடிக்க வெளியே சென்றுவிடுவேன். குருநாதர் என்னை தேடுவார். நான் வந்தவுடன் எங்கடா போனே “தம்” அடிக்கவா? ஏன்டா. கமல் நடிப்பை பாருடா நடிப்பை கத்துக்கோடா என்று கூறுவார்.

அதன் பிறகு கமல் நடிக்கும்போது அவரது நடிப்பை கவனித்தேன். தம் அடிக்க போகவேமாட்டேன். கமல் பாதை வேறமாதிரி. அதை நான் பின்பற்றாமல் எனக்கு வேற ரூட் ஒன்றை போட்டேன் கொஞ்சம் புத்தியை யூஸ் பண்ணினேன்.
நான் நடித்துக் கொண்டிருக்கும் “ரோபோ” எந்திரன், படம் கமல் நடிக்க வேண்டிய படம். அவருக்குதான் ஷங்கர் ரெடி பண்ணினார். ஆனால் சில கால தாமதத்தால் இப்போது மாறி போய் உள்ளது. ஷங்கர் ரோபோ பற்றி என்னிடம் கதையை சொல்லும்போது நான் நடிக்கமாட்டேன். இது கமலுக்காக தயார் செய்த கதை. அதில் என்னை கொண்டு வரமுடியாது என்றேன். ஆனால் ஷங்கர் சார் இது உங்களுக்காக வேறு மாதிரி செய்துள்ளேன்.
கமல் உண்மையான “சகலகலா வல்லவன்” கலையரசி தாய் மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ், என்னை ஆகியோரை கைகளால் பிடித்து கொண்டுள்ளார். ஆனால் கமலை மட்டும் மார்போடு அனைத்து பாதுகாத்து உள்ளார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று நாங்களும் நடிகர்கள்தானே கலையரசியிடம் நான் கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னார், நீ சினிமாவிற்கு வரவேண்டும் என்று இந்த ஜென்மத்தில்தான் ஆசைபடுகிறாய். ஆனால் கமல் 10 ஜென்மத்திற்கு முன்பே இருந்து ஆசைப்பட்டு கொண்டிருக்கிறார் என்று கூறினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
(செய்தி உதவி: மாலை மலர்)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...